தமையா – ஓ – தமையா

மனித வணக்கம் - கமல்ஹாசன் கவிதைகள்

தாயே... என் தாயே!
நான் மீட்ட சோலே!
அறுத்த கொடியே
குடித்த முதல் முலையே
என் மனையாளின்
மானசீகச் சக்கரவர்த்திசரண்
தகப்பா – ஓ – தகப்பா
நீ என்றோ உதறிய மை
படர்ந்தது கவிதையாய் இன்று
புரியா வரி இருப்பின் கேள்...
பொழிப்புரை நான் சொல்கிறேன்
தமையா – ஓ – தமையா
என் தகப்பனின்
சாயல் நீர்
அச்சகம் தான் ஒன்றிங்கே –
அர்த்தங்கள் வெவ்வேறு
தமக்காய் – ஓ – தமக்காய்
தோழி... தொலைந்தே போனாயே –
துணை தேடிப் போனாயோ...
மனைவி – ஓ – காதலி
நீ தாண்டாப் படியெல்லாம்
நான் தாண்டக் குமைந்திடுவாய்
சாத்திரத்தின் சூட்சுமங்கள்
புரியும்வரை.
மகனே – ஓ – மகனே
என் விந்திட்ட விதையே...
செடியே... மரமே... காடே...
மறுபிறப்பே
மரண சௌகர்யமே... வாழ்...
மகளே – ஓ – மகளே...
நீயும் என் காதலியே...
எனதம்மை போல்
எனைப் பிரிந்தும் நீ
இன்பம் காண்பாயோ...
காதலித்த கணவனுக்குள்
எனைத் தேடுவாயோ...
நண்பா – ஓ – நண்பா...
நீ செய்த நட்பெல்லாம்
நான் செய்த அன்பின் பலன்
இவ்விடம் அவ்விதமே.
பகைவா – ஓ – பகைவா...
உன் ஆடையெனும் அகந்தையுடன்
என் அம்மணத்தைக் கேலி செய்வாய்
நீ உடுத்து நிற்கும்
ஆடைகளே
உனதம்மணத்தின் விளம்பரங்கள்
மதமென்றும் குலமென்றும்
நீ வைத்த துணிக்கடைகள்
நிர்மூலமாகிவிடும்
நிர்வாணமே தங்கும்
வாசகா – ஓ – வாசகா...
என் சமகால சகவாசி
வாசி...
புரிந்தால் புன்னகை செய்
புதிர் என்றால் புருவம் உயர்த்து
பிதற்றல் எனத் தோன்றின்
பிழையும் திருத்து...
எனது கவி உனதும்தான்
ஆம்...
நாளை உன்வரியின்
நான் தெரிவேன்.

Comments

Popular posts from this blog

பாரதி வீர வசனம்

அவள் இல்லாத நாட்கள்...!