அவளின் ஞாபகங்களே அவனுக்கு சுவாசம் பன்னிரண்டு பாலைவன வருஷங்களுக்குப் பிறகு அவளை அவன் பார்க்க நேருகிறது. எங்கெனில்.. ஒரு ரயில் நிலையத்தில். எப்போதெனில்.. ஒரு நள்ளிரவில். எதிரெதிர் திசையில் செல்லும் ரயில்கள் இளைப்பாறிக் கொள்ளும் அந்த இடைவெளியில்.. ரயில்களின் எதிரெதிர் பெட்டிகளில் பழைய கண்கள் நான்கு பார்த்துக் கொள்கின்றன. அப்பொழுது- மனசில் எத்தனை மௌன பூகம்பம்!) உன்னைப் பார்த்த ஒரு நிமிஷத்தில் இமைகளைக் காணாமல் போட்டு விட்டன கண்கள். நீதானா? இல்லை- வேறொருவன் கண்களால் நான் பார்ககிறேனா? மனசின் பரப்பெங்கும் பீச்சியடிக்கும் ஒரு பிரவாகம். இதயத்தின் ஆழத்தில் கிடந்த உன்முகம் மிதந்து மிதந்து மேலே வருகிறது. ஓ! வருஷங்கள் எத்தனையோ வழிந்த பிறகும்.. என் மார்பு தடவும் அதே பார்வை.. அதே நீ! என் பழையவளே! என் கனவுகளில் அலையும் ஒற்றை மேகமே! உன் நினைவுகளில் நான் எத்தனையாவது பரணில் இருக்கிறேன்? அறிவாயா? என் மீசைக்கும் என் காதலுக்கும் ஒரே வயதென்று அறிவாயா? உன் பெயரை மறக்கடிப்பதில் தூக்க மாத்திரை கூடத் தோற்றுப் போனதே! ஓ! நீ மாறியிருக்கிறாய். உன் புருவ அடர்த்...